Monday, April 20, 2009

நூலகம்



(எப்ரல் 23 உலக புத்தகநாள் வாழ்த்துக்கள்)



புத்தகங்கள்
மெளனமாக சொல்வதை
மனிதர்கள்
கண்களால் கேட்கும்
அதிசய இடம்

இது
சகிப்புத்தன்மையின் சரணாலயம்
பைபுள்,குரான்,பகவத்கீதை
அருகருகே வைத்தாலும்
எவையும்
அடித்துக்கொள்வதுமில்லை
இடித்துக்கொள்வதுமில்லை

இது
ஒரு விமானம்
வந்து அமர்ந்தால் போதும்
பாஸ்போட் வேண்டாம்
பயணச்சிட்டு வேண்டாம்
உலக்ம் சுற்றலாம்

ஏன்
சிந்துசமவெளியின்
சந்துகளைக்கூட
சந்தித்து வரலாம்

இங்கு வரும்
எவரும் நேரத்தை
செலவழிப்பதில்லை
சேமிக்கிறார்கள்

இது
ஒரு தவச்சாலை
இங்கு உங்களுக்கு
வரம் கொடுக்க
புத்தகங்கள்
தவம் கிடக்கிறது

இது தேசத்தின்
அனுபவ வங்கி
நேசம் கொண்டோரே
கணக்கு வைத்துக்கொள்ளுங்கள்

அறிவு பசிப்போரே
உங்களுக்கு இது
அட்சய பாத்திரம்

இங்கு மட்டும்தான்
நூல்கள் மனிதனை
நெய்கின்றன

Friday, April 17, 2009

கொடைக்கானல் மலைப்பாதையில்......


மேகத்தை குனிந்து பார்க்கும்
வரம் கிடைத்தது
எனக்கு அங்குதான்.

நெருப்பால் அல்ல
பூக்களால் புகைந்து
கொண்டிருக்கும் பூமி அது

இங்கெல்லாம் சாலை
ஒரத்தில் மரங்கள் இருக்கும்
அங்கோ
மரங்களின் ஒரத்தில் சாலை

புகைப்பட்டால் கண்களில்
எரிச்சல் வரும்
அங்கு புகைப்பட்ட என்
கண்களுக்கு குளிர்ச்சி வந்தது
அந்த அதிசய புகை
அங்கு மட்டும்தான் சாத்தியம்

அங்கு அவ்வப்போது
வானம் பூக்களை பார்த்து
புன்னகை சிந்தும்
அதற்கு பெயர் சாரல்.

வானவில்லை
நறுக்கி போட்டதைப்போல் எங்கும்
வண்ண வண்ணப் பூக்கள்

அந்த மலையரசிக்கு
கோடிக்கரங்கள்
அத்தனையும் மரங்கள்

மிடுக்கான மலை
துள்ளி வரும்
வெள்ளி அருவி
பசுமை மரங்கள்
ஒன்றாய் பர்ர்த்தால்
என் தேசிய கொடி
நன்றாய் தெரியும்.

அங்கும் பார்த்தேன்
இரண்டாயிரம் அடி
கடல் மட்டத்திற்கு மேல்
மக்கள் வாழ்கிறார்கள்
ஆனால் அவர்களின்
வாழ்க்கை
வறுமை கோட்டிற்கு
கீழேதான்.

மூன்று நாட்கள்
நான் தங்கி வந்து விட்டேன்
என் மனம் இன்னும் வரவில்லை.

Sunday, March 29, 2009

அம்மா


என் அம்மாவிற்கு
உவமை சொல்ல

முயல்கிறேன்

என் அம்மாவிற்கு

உவமையாக

கடவுளை சொன்னால்

வேண்டாம்

கடவுள் என்றால்
மதம் இறுக்கும்

மதம் இருந்தால்

சண்டைகள் இருக்கும்


என் அம்மாவிற்கு

உவமையாக

காற்றை சொன்னால்

வேண்டாம்
காற்று

மரத்தின் தலை அசைத்தால்

தென்றல்

மரத்தின் வேரை அசைத்தால்

புயல்

என் அம்மாவிற்கு

உவமையாக
மழையை சொன்னால்

வேண்டாம்

மழையால் நிலத்தில்

விதைத்தது முளைக்கும்

அதுவே வெள்ள்மானால்

முளைத்தது அனைத்தும் மூழ்கும்


உலகில் குறையே

இல்லாத நிறை எது


எல்லா
உவமைகளும் உமையாய் நிற்கும்

இப்போது
புரிகிறது
என்
அம்மாவிற்கு
உவமை

என்
அம்மா மட்டும்தான்

Sunday, March 22, 2009

அலைபேசி


வார்த்தைகளை சிந்தாமல்
காதில் கொட்டும்
வார்த்தை புனல் செல்

நாம் சொல்வதை
எவர் காதிலும்
திர்த்து சொல்லாத
நேர்மையாளன் செல்

நீங்கள்
புன்னகையோடு பேசினாலும்
கோபத்தோடு பேசினாலும்
உணர்வு வயப்படாத
ஞானி செல்

காதலர்களுக்கு கையடக்க
தூதுவன் செல்

மதியாதார் தலை வாசல் மிதியாதே
இது பழமொழி
அழைப்பை ஏற்ர்காதார்
காதினில் நுழையாதே
இது செல்மொழி

மனிதனுக்கும் சரி
செல்லுக்கும் சரி
காசு இருந்தால்தான் மதிப்பு

காசு இருந்தால்
உன் பேச்சை மற்றவர் கேட்கலாம்
காசு இல்லையென்றால்
மற்றவர் பேச்சைத்தான்
நீங்கள் கேட்க முடியும்

எத்தனை மணி நேரம்
செல்லில் பேசினாலும்
சில மணித்துளிகள்
முகம் பார்த்து
புன்னகைக்கும் சுகத்திற்கு
ஒப்பாகுமா ?

Saturday, March 7, 2009

தண்ணீர் ! தண்ணீர் !

முன்பு
காசை தண்ணீர் போல்
செலவு செய்பவனை
ஊதாரி என்பார்கள்
இனி
காசை தண்ணீர் போல்
செலவு செய்பவனை
கருமி என்பார்கள்
முன்பு
பாலில் தண்ணீர் கலந்தால் குற்றம்
இனி
தண்ணிரில் பால் கலந்தால் பெருங்குற்றம்
செய்திகள் இப்படி வரலாம்
தண்ணீர் கடத்திய அமைச்சர்
தனி சிறையில் அடைப்பு
தண்ணீர் கடத்தல் தடுக்க
தனி படை அமைப்பு
சமுகம் இப்படி மாறலாம்
குடத்தில் தண்ணீர் இருந்தால் பணக்காரர்
தொட்டியில் தண்ணீர் இருந்தால் லட்சாதிபதி
குளம் வைத்திருந்தால் கோடிஸ்வரன்

புத்திசாலிகள் வங்கியில்
தண்ணிரை டெப்பாசிட் செய்வார்கள்
மக்கள்
இரத்தம் சிந்தினால் அல்ல
தண்ணீர் சிந்தினால் மட்டும்
கண்ணீர் விடுவார்கள்
இந்த இழி நிலை தடுக்க
மரங்களை வளர்த்து
வேர்களால் வேலி
அமைப்போம்
தண்ணிரை காக்க
நாளைய சமுகத்தின்
கண்ணிரை போக்க.......

Tuesday, March 3, 2009

குழப்பம்






நீ என் அருகில்

இருக்கும் போதெல்லாம்

எனக்கிருக்கும் ஒரே குழப்பம்

நான் யார் பேச்சை கேட்பது

உன் கண்களின் பேச்சையா ?

உன் உதடுகளின் பேச்சையா ?




என்ன மாயமோ


நீ ஒவ்வொரு முறையும்
சின்னதாய் தலைசாய்த்து
புன்னகைக்கும் போதெல்லாம்
நான் உன் வசம் முழுதாய்
சாயும் மாயம் நடக்கிறது !

Monday, March 2, 2009

கட்டுப்பாடு


திரியில் எரிந்தால்
அது தீபம்
திரிந்து எரிந்தால்
அது தீ !

அமைதியாய் ஓடினால்
அது ஆறு
அடங்காமல் ஓடினால்
அது வெள்ளம்

நண்பா நீ
தீயின் சக்தி கொண்ட
தீபமாய் இரு

வெள்ளத்தின் வீரியம் கொண்ட
ஆறாய் இரு

Wednesday, February 25, 2009

அசட்டு அலைகள்











ஒரு முறை காலில்

விழுந்து வணங்கலாம்
அவளின் பாதம் பார்த்த பரவசத்தில்
எத்தனை முறை வந்து விழுகிறது
அந்த அசட்டு அலைகள்

ஆடை








வானம், பூமி
பறவைகள், விலங்குகள்
சூரியன், சந்திரன்
இவை
நிர்வாணம் உடுத்தி
அழகாய் இருக்கிறது
இங்கு
மனிதர்கள் மட்டும் ஆடை உடுத்தி
அசிங்கமாய் இருக்கிறார்கள்

Tuesday, February 24, 2009

அவளின் விழிகள்

நீர் இல்லாமல்
நீந்தும் மீன்கள்
வேறென்ன
உன் கண்கள்
உன் விழி பேசும்
மொழி புரியவில்லை
ஆனால்
அர்த்தம் அழகாய் புரிகிறது
இரண்டு வண்ணம் கொண்ட
உன் கண்கள்
நான் பார்க்கும் போது மட்டும்
ஆயிரம் வண்ணங்களை அளிக்கிறது
எப்படி இது சாத்தியம்
உன் கண்களில் மாத்திரம்

மரமாகிபோங்கள் மனிதர்களே




எல்லா மரங்களும்
கைகளை நீட்டி இருக்கிறது
எடுப்பதற்கு அல்ல
கொடுப்பதற்கு
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே


எந்த மரமும் அடுத்த மரத்தின்
கிளை உடைப்பதில்லை
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே

எந்த மரமும் சும்மா இருப்பதில்லை
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே !

தான் உயரே செல்ல செல்ல
தன் மண்ணின் மிது
பற்றை அதிகமாக்கி
கொள்வது மரங்களே
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே !


கோவிலில் வளர்ந்தாலும்
சர்ச்சில் வளர்ந்தாலும்
மசூதியில் வளர்த்தாலும்
மரங்களுக்கு மதம் பிடிப்பதில்லை
மரம் மரமாகவே இருக்கிறது
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே !
உலகில் முதலில்
முழு உடல் தானம்
செய்தது மனிதன் இல்லை
மரங்களே
அதனால் மரமாகிப் போங்கள் மனிதர்களே !

Monday, February 23, 2009

மாற்றம்















முன்பு என் கையெழுத்து கிறுக்கல்
இப்போதோ ஓவியம்
முன்பு பேச தயங்கியவன்
இப்போதோ கவிதை சொல்கிறேன்
முன்பு நகைசுவைக்கு கோபபட்டவன்
இப்போதோ திட்டினாலும் சிரிக்கிறேன்
முன்பு பூக்களை கசகியவன்
இப்போதோ முட்களையும் முத்தமிடுகிறேன்

நான் என் மனதிடம் கேட்டேன்
ஏன் இந்த மாற்றம்
என் மனம் சொன்னது
நீ காதலித்துக்கொண்டு இருக்கிறாய்